`12 மணி நேர வேலை மசோதா கொண்டுவரப்பட்டது ஏன்?’ – மே தின உரையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?!

16

உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்திருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு உரையாற்றினார்.

அப்போது அவர் மே தினப் பூங்கா உருவானது குறித்து பேசுகையில், “1990-ம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிற நேரத்தில், இந்த நேப்பியர் பூங்காவுக்கு “மே தினப் பூங்கா” எனப் பெயர் சூட்டியவர் கலைஞர்தான். காரிலே வருகிறபோது, நம்முடைய பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் எங்களிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மறைந்த டபிள்யு.ஆர். வரதராஜன் ஒரு கோரிக்கை வைத்தார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் ஒரு நினைவுச்சின்னம் சென்னை மாநகரத்தில் அமைத்திட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை வைத்தவுடனே சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறபோதே, அதை நிறைவேற்றித் தருவோம் என்று முடிவுசெய்து, அறிவித்தது மட்டுமல்ல, அந்த நினைவுச்சின்னம் எப்படி அமைய வேண்டும் என்று தன்னுடைய கையாலேயே அதை வரைபடமாக வரைந்து சட்டமன்றத்திலே காட்டி அதற்குப் பிறகு அமைந்ததுதான் இந்த மே தின நினைவுச்சின்னம் என்பதையும் நான் உங்களுக்குப் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர், 12 மணி நேர வேலை மசோதா குறித்தும் சில கருத்துகளை முன்வைத்தார். “தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவாகியிருக்கிறது. அதை நான் பேசவில்லை என்று நீங்கள் யாரும் கருதவேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதுமட்டுமல்ல, அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதிலும் குறிப்பாக, தென், வட மாவட்டங்களில் அந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அந்த நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டத் திருத்தம் அல்ல.

மிக மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அதுவும் நிபந்தனைகளுடன், கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணிநேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்பதே அந்தச் சட்டத்தினுடைய திருத்தம். தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. ஆனாலும் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது.

தி.மு.க அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும் தி.மு.க-வினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களைப் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய ஜனநாயக மாண்புகொண்ட அமைப்பு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு, இதன் மூலம் அது மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடியாக அனைத்து தொழிற்சங்கத் தோழர்களையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப் பிறகு தொழிற்சங்கத்தின் கருத்துகளைக் கேட்டு – உடனடியாக எந்தவித தயக்கம் இன்றி, துணிச்சலோடு அதைத் திரும்பப் பெற்றிருக்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததும் அதைத் திரும்பப் பெறுவதற்காக ஓராண்டுக்கு மேலாக ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக உழவர்கள் தலைநகர் டெல்லியில் போராடினார்கள். வெயிலில், மழையில், பனி, இது போன்ற கொடுமையில் அவர்கள் போராடி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் போராடிய காரணம் உங்களுக்குத் தெரியும். அதனால் பலபேர் உயிரையும் இழந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் உழவர்களின் போராட்டத்தைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை வதைபடக்கூடிய நிலையில் விட்டுவிட்டார்கள்.

அதேபோல, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து ஒரே இரவில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, அதில் மகிழ்ச்சியடைந்தவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களைப் போராடவிட்டு ரசித்தவர்கள், தூத்துக்குடியில் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், இவர்களுக்கு ஊதுகுழலாக இருக்கக்கூடிய சில ஊடகங்களும் இதை நமது அரசுக்கு எதிராக மாற்றிவிடலாம் என்று திட்டமிட்டு பிரசாரத்தைப் பரப்பினார்கள்.

ஆனால், அவர்களுடைய தீய எண்ணங்களையெல்லாம் தொழிலாளர் தோழர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். தொழிற்சங்கத்தினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் அந்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்ற தொழிலாளர் தோழன்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை, அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடியவன். ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது துணிச்சல் என்றால் – அதை உடனடியாகத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக் கூடாது. இப்படித்தான் கலைஞர் எங்களுக்குப் பயிற்சி தந்திருக்கிறார்கள். எனவே, அதனால்தான் அதை நிறுத்திவைத்திருக்கிறோம்.

இது குறித்த தகவல் பேரவைச் செயலகத்துக்கு உரிய துறையின் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது குறித்த செய்தி மாண்புமிகு பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும் ” என்றார்.

 

 

Author: பிரேம் குமார் எஸ்.கே.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.