டெல்லியில் தொழிலதிபர்களின் மனைவிகளை மிரட்டி ரூபாய் 200 கோடிக்கும் அதிகமாகப் பணம் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்துகொண்டே தொழிலதிபர்களை மிரட்டுவது, மிரட்டிச் சம்பாதித்த பணத்தை நடிகைகளுக்காகச் செலவு செய்வது போன்ற காரியங்களில் சுகேஷ் ஈடுபட்டார். இதில் பாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகளை பணம், பரிசு கொடுத்து நட்பாக்கிக்கொண்டார். இதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நட்பையும் தாண்டிய காதல் உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜாக்குலினுக்கு சுகேஷ் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு, பணம் கொடுத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு, டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதை நடிகை ஜாக்குலினும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், ஜாக்குலினும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்துகொண்டு அடிக்கடி சுகேஷ் ஜாக்குலினுக்குக் கடிதம் எழுதிவருகிறார். கடந்த ஹோலி பண்டிகைக்குக்கூட கடிதம் எழுதியிருக்கிறார். தற்போது தன் பிறந்தநாளையொட்டி ஜாக்குலினுக்குக் காதல் கடிதம் ஒன்றை சுகேஷ் எழுதியிருக்கிறார்.

அதில், “எனது பேபி ஜாக்குலின் பெர்னாண்டஸ்… என் பொம்மா இந்த நாளில் உன்னை ஆயிரம் மடங்கு மிஸ் செய்கிறேன். என்னைச் சுற்றியிருக்கும் ஆற்றலை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. என்மீது உனக்கு இருக்கும் அன்பு ஒருபோதும் முடிவுக்கு வராது என்று எனக்குத் தெரியும். உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
எனக்கு அதற்கு ஆதாரம் தேவையில்லை பேபி. உன் காதல் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மதிப்பில்லா பரிசு. என்ன வந்தாலும் உனக்காக நான் இங்கே இருக்கிறேன் என்று உனக்குத் தெரியும். உன் இதயத்தைக் கொடுத்தமைக்காக நன்றி. லவ் யூ பேபி. எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Author: மு.ஐயம்பெருமாள்