பாகிஸ்தான்: இம்ரான் கான் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறை; தொடரும் பதற்றம்!

14

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2018 முதல் 2022 பிரதமராக இருந்தபோது, வெளிநாட்டுப் பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இம்ரான் கான், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்துவந்ததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இம்ரான் கான்

அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது, இம்ரான் கான் வீட்டைச் சுற்றி அவரின் கட்சித் தொண்டர்கள் இருந்தனர். அதோடு அவரின் மனைவி புஷ்ரா பேகம் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு வந்த போலீஸார் தடுப்புகளை அகற்றிவிட்டு, அவரின் வீட்டின் கதவை உடைத்து, அங்கிருந்த தொண்டர்கள்மீது தடியடி நடத்தியதாக கட்சித் தொண்டர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்த நடவடிக்கையின்போது, குறைந்தது 10 பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் படுகாயமடைந்ததாகவும், 30-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறது. அதில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டருகே போலீஸாரால் தாக்கப்பட்டதும் பதிவாகியிருக்கிறது.


அதைத் தொடர்ந்து, இம்ரான் கான் தன் ட்விட்டர் பக்கத்தில், “என் மனைவி புஷ்ரா பேகம் தனியாக இருக்கும், ஜமான் பூங்காவிலுள்ள என் வீட்டின்மீது போலீஸார் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். எந்தச் சட்டத்தின்கீழ் அவர்கள் இதைச் செய்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

Author: VM மன்சூர் கைரி

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.