திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்குள் நேற்று மதியம் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழ்செல்வன் (14) மயங்கி விழுந்தார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியருக்குத் தகவல் தெரிந்ததும் மாணவன் தமிழ்செல்வனை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கொண்டுசென்றனர். அங்கு தமிழ்செல்வனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பள்ளிக்குச் சென்ற மாணவன் தமிழ்செல்வன், உயிரிழந்த சம்பவம் காட்டுத்தீபோல பரவியது. அதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்துவந்தனர். இதற்கிடையில் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரணி போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும், அவர்கள் மாணவன் தமிழ்செல்வனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மாணவன் தமிழ்செல்வன் மரணம் குறித்து சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது உயிரிழந்த தமிழ்செல்வனை சிலர் கேலி கிண்டல் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில்தான் இந்தச் சம்பவம் நடந்தது எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்செல்வன் உயிரிழப்புக்கு காரணம் எனக் கருதி அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணைக்குப் பிறகு அந்த மாணவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். அதே நேரத்தில் பள்ளி நேரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட ஆசிரியர்மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முடிவுசெய்திருக்கிறார்கள்.
Author: எஸ்.மகேஷ்