கோவை நீதிமன்ற வளாகம் எப்போதும்போல இன்று காலை பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்துக்கு அருகே ஒரு பெண்மீது ஆண் ஆசிட்டை ஊற்றினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பெண்ணை பாதிப்பிலிருந்து தடுக்க முயன்ற வழக்கறிஞர் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த வழக்கறிஞர்களே அந்த நபரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் என்ற ஆண், தன் மனைவி மீது ஆசிட் வீசியது தெரியவந்திருக்கிறது. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அந்த வழக்கு விசாரணைக்குத்தான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். நீதிமன்றத்தில் மனைவியின் அருகே அமர்ந்திருந்த கணவன், தண்ணீர் பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மனைவிமீது தலை முதல் கால் வரை ஊற்றியிருக்கிறார்.
சிவக்குமாரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்தோம். ஆசிட் வீச்சால் 80 சதவிகித பாதிப்புடன் அவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.


கணவருக்கு, தன் மனைவிமீது சந்தேகம் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நீதிமன்றத்துக் வாட்டர் பாட்டிலில் ஆசிட்டைக் கொண்டுவந்ததால் கண்டறிய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக சிவக்குமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது வழக்கறிஞர்கள் சிவக்குமாரைத் தாக்க முயன்றனர். இதனால் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கடந்த மாதம் கோவை நீதிமன்ற வளாகத்துக்கு அருகே பட்டப்பகலில் ரெளடி ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Author: குருபிரசாத்